வடக்கு மீனவர்கள் தமிழக மீனவரால் பாதிக்கப்படக்கூடாது; யாழில், பிடிபட்ட இந்திய மீனவர்களிடம் அமைச்சர் ஜீவன் வலியுறுத்து

வடக்கு மீனவர்கள் தமிழக மீனவரால் பாதிக்கப்படக்கூடாது; யாழில், பிடிபட்ட இந்திய மீனவர்களிடம் அமைச்சர் ஜீவன் வலியுறுத்து

வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிய படகுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் தமிழக மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்படக்கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலரும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்ச்சாட்டில் கைதாகி யா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்த பின்னரே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தேன். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எடுத்து கூறினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

43 மீனவர்களில் இருவர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர். ஏனைய 41 மீனவர்களுக்கும் இலங்கை அரசு மூலமாக அல்லது, எம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகின்றேன். இலங்கை பொலிஸார் தம்மை நன்றாக நடத்துகின்றனர் என மீனவர்கள் தெரிவித்தனர்.

வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிய படகுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் அத்துமீறும் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படக்கூடாது.

தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர், இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது.

இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும். மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமும், இலங்கை ஜனாதிபதியிடமும் நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.

மீனவர் பிரச்சினையென்பது இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை , இது இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டியதொன்றாகும். நெடு நாட்கள் நீடிக்கும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என கருதுகின்றேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )