ரணிலின் திட்டத்தை முறியடிப்போம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ரணிலின் திட்டத்தை முறியடிப்போம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ராஜபக்சர்கள், யுத்த வெற்றியை முதன்மையாகக் கொண்டு நாட்டின் உரிமையை எழுதி எடுத்தது போல வெட்கமின்றி ஐ.தே.கவின் தலைமைத்துவத்தை எழுதி எடுத்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கத் தயாராகி வருவதாக அவருக்கு நெருங்கிய பத்திரிகைகள் ஊடாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வத்தளையில் இடம்பெற்ற ஜனபௌர மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலயே நாமும் இருக்கிறோம்.என்றாலும் நாட்டு மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட்டே அதனை இல்லாதொழிக்க வேண்டும். பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட்டே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். இது வரை போதிய காலம் காணப்பட்டது.வேண்டிய வாக்குகள் காணப்பட்டண.ஜனாதிபதி ஆகுவதற்கான ஆசனங்கள் காணப்பட்டன.ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள 134 ஆசனங்கள் இருந்தன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க 150 ஆசனங்கள் காணப்பட்டன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்றிருந்தால் மீதமுள்ள 16 பேரை கொடுத்திருப்போம்.

ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டிய காலம் நெருங்கியுள்ள நேரத்தில் இவர்கள் இதனை ஒழிக்க முன்வந்துள்ளனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் மக்கள் ஆணைக்கு முரணாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் ஆயுள் காலத்தை நீடித்துக் கொள்ள தயாராகி வருகிறார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட கட்சியாக இந்நாட்டு மக்களின் வாக்களிக்கும் உரிமையை இல்லாது செய்ய செயற்படும் கொடுங்கோல் ஆட்சிக்கு நாம் ஓர் தெளிவான எச்சரிக்கையை விடுக்கிறோம்,திகதி நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலுயுறுத்துகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதியை நியமிக்க தற்போதைய ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தில் திருத்தம் செய்வதற்கு அரசியல் கொள்கை ரீதியாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், புதிய மக்கள் ஆணையொன்றின் ஊடகவே இதனைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இவ்வாறு இல்லாமல் அவ்வாறானதொன்று இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )