
புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமை கிடையாது அவரின் அனைத்து உறவுகளும் சிங்களவர்களுடன்தான்
தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 9 எம். பிக்களுக்கு மட்டுமே தம்மை புலிகள் என்று கூற,புலிகள் பற்றி பேச உரிமையுண்டு. சாணக்கியன் எம்.பி.க்கு அந்த உரிமை கிடையாது. ஏனெனில் அவரின் அனைத்து நடவடிக்கைகளும் உறவுகளும் சிங்களவர்களுடனேயே இவ்வளவு காலமும் இருந்தது என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இங்கு பேசிய சாணக்கியன் எம்.பி. ”நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்”என்று குறிப்பிட்டார். அவருக்கும் புலிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் போய் அக்கட்சியின் மட்டக்களப்பட்டு மாவட்ட அமைப்பாளராக பதிவை பெற்றவர்.
அது மட்டுமல்ல இவர் கண்டியில் உள்ள சிங்களப்பாடசாலையில் தான் கல்வி கற்றார் .சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்களப்பெண்கள்தான் அவரின் தோழிகள்.அவர் ஓரி சிங்களப்பெண்ணைத்தான் திருமணமும் செய்யவுள்ளார்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 9 எம். பிக்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு.ஏனெனில் அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள். இந்த சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியும் உரிமையும் கிடையாது என்றார்.

