
சஹ்ரானை இயக்கியவர் மிகவும் திறமையானவர்; ஐ.எஸ். சஹ்ரானிற்கு உதவவில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சி.ஐ.டி.க்கு பொறுப்பாக இருந்த அதிகாரியான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரட்ன தெரிவித்துள்ளார்.
ரி.என்.எல். தொலைக்காட்சிக்கு திங்கட்கிழமை இரவு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அமைப்புகள் மற்றும் புலனாய்வு முகவர்களின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹாசிமை கட்டுப்படுத்திய மற்றுமொருவர் காணப்பட்டார். அவர் மிகவும் புத்திசாலி. இலங்கையில் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது. விடுதலைப் புலிகள் கூட அதனை செய்யவில்லை என செனிவரட்ண தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஹாசிம் முறையான கல்வியறிவற்ற ஒருவர். அவருக்கு இவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திறமையிருந்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு மேலே யாரோ இருந்தார்கள். மிகவும் திறமையும் பயிற்சியும் அனுபவமும்மிக்க ஒருவர் அவரிடம் ஒருங்கிணைந்த தாக்குதலிற்கு பலரை ஒருங்கிணைக்கும் திறன் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர்களிற்கு சஹ்ரான் ஹாசிமை தெரிந்திருந்தது. அவர்கள், அவருடன் இணைந்தும் செயற்பட்டுள்ளனர். தாக்குதலிற்கு முன்னரும் தாக்குதலின் போதும் அதன் பின்னரும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் சி.ஐ.டி.யின் முன்னாள் தலைமை அதிகாரி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களே காரணம் என்ற கருத்தினை உருவாக்குவதற்கு புலனாய்வு பிரிவினர் கடுமையாக முயற்சித்தனர். அவர்கள் சில ஆதாரங்களை திட்டமிட்டு உருவாக்கினார்கள். இது குறித்து சி.ஐ.டி.க்கு பெரும் சந்தேகம் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறிவதற்கான விசாரணைகளை தேசிய புலனாய்வுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் பண்டார முன்னெடுத்தார். எனினும் இந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. ஐ.எஸ். அமைப்பிடமிருந்து சஹ்ரானிற்கு உதவிகள் கிடைத்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சுரேஸ் சாலேக்கும் சி.ஐ.டி.யினருக்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை.சனல் 4 இன் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

