
ஜனாதிபதி காலனித்துவ ஆளுநராக செயற்படுகின்றார்-மருத்துவர் வசந்த பண்டார
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் காலனித்துவ செயலாளராகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் ஆளுநராகவும் நடந்துக்கொள்வதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
66 தேசிய அமைப்புகள் இணைந்து அமெரிக்க தூதுவருக்கு எதிராக தயாரித்துள்ள கடிதத்தை நேற்று வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்க சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சூம் தொழிற்நுட்பம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி மாகாண சபை தேர்தலை நடத்துமாறும், 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அறிவிக்கின்றார்.
உலகில் எந்த நாட்டிலும் இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. இதனை தேசிய அமைப்புகள் எதிர்க்கின்றன எனவும் வசந்த பண்டார கூறியுள்ளார்.
அதேவேளை அமெரிக்க தூதுவர் தனது அதிகாரம், சிறப்புரிமைகளுக்கு அப்பால் சென்று வியன்னா இணக்கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாகவும் அண்மையில் ஒரு தினத்தில் அவர், இராணுவ தளபதிகளை சந்தித்து ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ இதன் போது கூறியுள்ளார்.
இப்படியான சந்தர்ப்பங்களில் அமெரிக்க தூதுவரை வெளிவிவகார அமைச்சு அழைத்து விளக்கம் கேட்கும் வாய்ப்பு வெளிவிவகார அமைச்சருக்கு உள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்க தூதுவர் தனது எல்லையை மீறி செயற்பட்டுள்ளமை சம்பந்தமான வெளிவிவகார அமைச்சு விளக்கம் கேட்க வேண்டும் எனவும் பெல்லன்துடாவ குறிப்பிட்டுள்ளார்.

