
இந்திய மருந்துகள் தரமற்றவையா?; நிராகரிக்கிறது சுகாதார அமைச்சு
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ் 679 மருந்துகளுக்கான முன்பதிவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 278 மருந்துகள் தற்போது நாட்டின் சுகாதார அமைப்பில் பயன்படுத்தப்படுவதாகவும் பயன்படுத்தப்படும் மருந்துகள் தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியுடன் நாட்டின் அத்தியாவசிய மருந்து பட்டியல் 383 ஆக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது 830 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விசேட வைத்தியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய பதிவேட்டின் பிரகாரம் நாட்டில் தற்போது 266 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை சிசேரியன் உள்ளிட்ட சத்திர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் 30,000 அரை மயக்க ஊசி மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நிறுத்தப்பட்ட மயக்க மருந்து ஊசிகளுக்கு பதிலாக இந்த ஊசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை சத்திரசிகிச்சை கூடங்கள் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

