
பாராளுமன்றம் செயலிழந்தது அதிகாரங்கள் ரணில் வசம்
பாராளுமன்றத்தை செயலிழக்க செய்து, அதன் அதிகாரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் முஜிபுர் ரஹ்மான் இதனை கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தின் அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கும் யோசனை பாராளுமன்றத்தில் சனிக்கிழமை முன்வைக்கப்பட்டது.
சனிக்கிழமை பாராளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி பிரான்ஸ் சென்றிருந்த போது ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
சாதாரண சம்பிரதாயங்களுக்கு அப்பால் சென்று அவசர வேலை ஒன்றுக்கு தயாராகி வருவதாக உலகத்திற்கு காட்டி நாடாளுமன்றத்தை கூட்டினார்.
கடன் மறுசீரமைப்பது தொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அது தொடர்பாக விவாதம் நடநத்தப்படும் என்றே அரசாங்கம் முதலில் கூறியது.
நிதி அதிகாரங்கள் தொடர்பில் எவ்வித வரையறைகளும் இன்றி முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதற்காகவே பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாராளுமன்றம் 4 ஆம் திகதி கூடவிருந்த நேரத்திலேயே அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டினர்.
சாதாரணமாக பாராளுமன்றம் கூடும் போது ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலவாகும். சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் இருக்கின்றனர். சனிக்கிழமை என்பதால், ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும்.
நாடு வங்குரோத்து அடைந்துள்ளதாக கூறுகின்றனர். உலகம் முழுவதும் கடனை கேட்டு பிச்சை எடுக்கின்றனர்.
ஈரத்துணிகளை கட்டிக்கொள்ளுமாறு மக்களுக்கு கூறிவிட்டு, இவர்கள் சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுகின்றனர்.
செவ்வாய் கிழமை பிரேரணையை நிறைவேற்றி இருக்கலாமே ஏன் இந்த அவசரம்.
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரமும் நிதி அதிகாரமும் இருக்கின்றது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை பெற்றுள்ளார்.இதனால், பாராளுமன்றம் நிதி அதிகாரத்தை இழந்துள்ளது. தற்போது பாராளுமன்றத்தினால், எந்த பயனுமில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

