கஜேந்திரகுமார்எம்.பி.மீது தாக்குதல் துப்பாக்கிசூடு நடத்தவும் முயற்சி

கஜேந்திரகுமார்எம்.பி.மீது தாக்குதல் துப்பாக்கிசூடு நடத்தவும் முயற்சி

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் புலனாய்வுப் பிரிவு அட்டகாசம்; தப்பியோடியவர்களில் ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெறுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கூறுகையில்,

நாம் மருதங்கேணியில் உள்ள விளையாட்டுக்கழகமொன்றின் இளைஞர்களுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை மாலை சென்றிருந்தோம்.அதன்போது சிவில் உடை தரித்த இனம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்ததுடன் தொலைபேசி மூலம் இளைஞர்களுடனான எமது கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்வதற்கு முற்பட்டனர்.

இதனையடுத்து எனது உத்தியோகத்தர் அவர்களிடத்தில் விபரங்களை கோர முற்பட்டபோது அவர்கள் தகவல்களை வெளியிடவில்லை. அச்சமயத்தில் நானும் என்னுடன் உள்ளிட்டவர்களும் அவர்கள் யார் என்பதை அறிவதற்கு முற்பட்டபோதும் அவர்கள் தமது அடையாளத்தினை வெளிப்படுத்தவில்லை.

ஒருகட்டத்தில் தம்மை புலனாய்வுப் பிரிவினர் என்று தெரிவித்த போதும், அவர்கள் அதற்கான அடையாளத்தினைக் காண்பிக்கவில்லை. அத்துடன் தொடர்ச்சியாக எம்முடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களில் ஒருவர் என்னை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். .இதனையடுத்து மற்றவரை நாம் சுற்றிவளைத்துப் பிடித்தோம். உடனடியாக அவர் பொலிஸாருடன் தொலைபேசியில் உரையாடினார்.

இதற்குள் அருகிலிருந்த பாடாசலையில் இருந்து வருகை தந்த சிவில் உடைதரித்த ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தரும் நாம் தடுத்து வைத்திருந்தவரை விடுமாறு கூறி மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தினர். அவர்களுள் ஒருவர் என்னை துப்பாக்கியால் இலக்குவைத்து, குறித்த நபரை விடுவிக்குமாறு மிரட்டினார்.

அச்சமயத்தில் அங்கு வருகை தந்திருந்த பொலிஸ் உபபரிசோதகர் தரமுடைய ய ஏ.ஈ.ஜயதிஸ்ஸ என்பவர் தானே அப்பகுதிக்கான பொலிஸ் நிலைய பதில் அதிகாரியாக கடமையாற்றுவதாகவும் அவர்கள் புலனாய்வுப்பிரிவினர் என்றும் அவர்களை விடுவிக்குமாறும் கோரினார்.

எனினும், என்மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றவரை வரவழைத்து நடவடிக்கைளை எடுக்கும் வரையில் தடுத்து வைத்துள்ளவரை விடுவிக்க மாட்டோம் என்று கூறினோம்.

இதனால் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் என்னை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரப்பட்டது. அத்துடன் அந்த அதிகாரி, புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களுக்கு தண்டனையாக இடமாற்றத்தினை வழங்குவதாகவும் அத்துடன் இருதரப்பு இணக்கப்பாட்டுடன் விடயத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் கூறினார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நான், இந்தச் சம்பவத்தினால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறி அங்கிருந்து வெளியேறினோம் என்றார்.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர்கள் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மக்கள் சந்திப்புக்காக வடமராட்சி பகுதிக்கு சென்றுள்ளார்.இதன்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு புலனாய்வாளர்களால் அவரை தலைக்கவசத்தினால் தாக்கி கீழே விழுத்தி விட்டுத் தப்பித்து ஓடியுள்ளனர்.இதன்போது அவர்களை பின்னாலே துரத்திச் சென்றபோது அங்கிருந்த பாடசாலை ஒன்றுக்கு அருகே நின்ற பொலிஸார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.யை நோக்கி சுடுவதற்கு முயற்சித்துள்ளார்.இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம், எதிர்க்கின்றோம். மீண்டும் கூறுகின்றோம், உங்கள் துப்பாக்கிகளால் எங்கள் உரிமைக்கான தாகத்தைத் தணிக்கவோ அடக்கவோ முடியாது எனக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவிக்கையில்:

இந்த மக்கள் சந்திப்பினை படம் படித்தவர்கள் மீது யார் நீங்கள்?உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் என முரண்பட்டுக் கொண்டிருந்த சமயம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை கையால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.மற்றையவரை சந்திப்பில் பங்கு கொண்டவர்கள் பிடித்தனர்.

அச்சமயம் சந்திப்பு நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே வீதியில் நின்ற ஒருவர், எங்கட ஆள் அவரை விடுங்கள் எனக் கூறி துப்பாக்கியை காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.

இதனை கண்டிப்பதுடன் இது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.அது மட்டுமன்றி தமிழ் மக்கள் மீதான அடக்கு முறையை வெளிப்படுத்துகின்றது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (9 )