
யாழ்.-சென்னை விமானம் ஏழு நாட்களும் சேவை
யாழ்ப்பாண விமான நிலையத்திலிருந்து வாரத்துக்கு ஏழு நாட்களும் விமான சேவைகளை நடத்த இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால. டி சில்வா தெரிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு சென்னைக்கு தற்போது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுகின்றன.இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்திருகின்றோம். இதற்கான கடன்வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

