
மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கைது
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரால் 18.01.2023 கைது செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டார். ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதில் வேலன் சுவாமிகளும் பங்கேற்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக நல்லூர் நோக்கி சென்றவேளை, தடுப்புக்களை ஏற்படுத்தி பொலிஸார் அவர்களை தடுத்தனர். எனினும் பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி மக்கள் செல்ல முற்பட்டனர். அதன்போது, பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரால் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலரை கைது செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

