
ஓரணியில் சேராவிட்டால் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம்; மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.அப்படி இல்லாது விட்டால் மக்களாகிய நாங்கள் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் எனத்தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வடக்கு ,கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடகிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ்தேசிய அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி கடந்த 5ஆம் திகதி தொடக்கம் நேற்று 10ஆம் திகதிவரை தொடர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதன் அங்கமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இறுதி நாளான நேற்று காலை 10 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர்.
இதன் போது வடக்கு,கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் சிறுபான்மை தமிழ்தேசிய அரசியல்கட்சிகள் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.
வடக்கு,கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு, கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்படவேண்டும்.
இதில் பெண்கள் 50 வீதம் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும். வடக்கு,கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமையவேண்டும். தற்போது வட,கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983 களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் மத, கலா சார இடங்கள் தொல் பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தல் வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றம், உள்ளூராட்சி சபைகளுக்கு அனுப்பிய அரசியல் வாதிகள் எங்கள் மக்களைப்பற்றி ஒரு நாளும் சிந்திப்பதில்லை அவர்கள் சிந்திதிருந்தால் நாங்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்ற வாசகங்கள் கொண்ட பதாகை களுடன் கோஷம் எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

