
காத்திருப்பு!!
நீ விட்டுச் சென்ற இடத்தில்தான்
நான் இன்னும்
உனக்காக காத்திருக்கிறேன்!
பல காலமாய்
நெஞ்சம் வாடுது…
உன்னோடு கதைபேச
மனம் நாடுது…
என் நேசமே…!!
எனதுடலில் ஒட்டுண்ட
சன்னத் துகள்களோடும்
கலைந்து போகா கந்தக வாசனையோடும்
நெருஞ்சி முள்ளின் மீதுதானே
எனதுறக்கம்!!
வெட்டி எறிந்திட்டபோதும்
வளரும் நகம்போல்
உனதான நினைவுகளும்
படர்ந்து செல்கிறது!
முகவரி இன்றி
தொலைதூரம் சென்றாயே!
கண்கள் இருந்தும் குருடாக வாழ்கிறேன்.
கனதியான மனதோடு தேடுகிறேன்.
மன்னாதி
எம் மன்னனவன் சீமையிலே
நமது கனவுகளும்
சாம்பலாகிப் போனதுவே!
ஓ..எனதுறவே…!!
உன் நினைவுகள்
எனை வதம் செய்கிறதே!
இமைகளின் மழைதனில்
நனைகிறேன்.
எந்தன் நெஞ்சமோ
உனதான நினைவுகளே
தஞ்சமென
சந்தம் இசைக்கிறது..
ஒரு முறை வருவாயோ….
எம் மண்ணிலே
மீண்டும் உன் பாதம் பதித்து…..!!
-பிரபாஅன்பு
CATEGORIES இலக்கியம்

