உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி எற்படலாம்

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி எற்படலாம்

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக சந்திப்பொன்றின் போது அதில் பங்கேற்றிருந்த உலக வங்கியின் உயரதிகாரியான டேவிட் மெல்பாஸ் குறிப்பிடுகையில், ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக, உணவு, எரிபொருள் மற்றும் உரம் போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என அறிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொவிட்-19 தொற்றுப் பரவலும் இந்த நெருக்கடி நிலையில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என பல தரப்புகளாலும் வெளிப்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தலின் பிந்திய எச்சரிக்கையாக இது அமைந்திருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சர்வதேச மொத்த தேசிய உற்பத்தியை கவனத்தில் கொண்டு, நெருக்கடி ஏற்படுவதை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது என்பதை பற்றி கவனம் செலுத்துவது மிகவும் கடினமான காரியமாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எரிபொருட்களின் விலைகளை இரு மடங்காக அதிகரிக்கும் தீர்மானம் இந்த பொருளாதார நெருக்கடிக்கு போதுமானதாக அமைந்திருக்கும் என்றார்.

உலகின் நான்காவது மாபெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மனியில் தற்போது நிலவும் உயர்ந்த எரிபொருள் விலை காரணமாக, அந்நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு மந்த கதியை எய்தியுள்ளதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டார்.

ஐரோப்பா, சீனா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும் மந்தமான பொருளாதார வளர்ச்சியை அவதானிக்க முடிவதுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பணவீக்க நிலை காரணமாக இதைவிட மிகவும் மோசமான பாதிப்புகளை அவதானிக்கக்கூடியதாக இருக்குமெனவும் தமது உரையில் டேவிட் மெல்பாஸ் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதத்தை ஏற்கனவே அறிவித்திருந்த 4.1% என்பதிலிருந்து 3.2% ஆக கடந்த மாதம் உலக வங்கி குறைத்திருந்தது. உக்ரேன் – ரஷ்யா இடையிலான போர் நிலையை மேற்கோள் காட்டி இந்த குறைப்பை உலக வங்கி அறிவித்திருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )