
சாகல இந்தியா செல்ல முன் எங்களுடன் பேச வேண்டும்; யாழ் மாவட்ட கடற் தொழிலாளர்கள்
ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரட்நாயக்க இந்தியா சென்று மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச முன்னர் யாழ் மாவட்ட மீனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் வேண்டுகோள் விடுத்தார்.
புதன்கிழமை யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய எல்லை தாண்டிய மீனவர்களினால் நாம் பல்வேறு அசெள கரியங்களை அனுபவிக்கையில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றோம்.
அண்மையில், கறுப்புக் கொடிகளை தாங்கியவாறு இலங்கை கடல் எல்லை வரை எமது போராட்டம் சென்றது. அதன் விளைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுடன் பேசுமாறு ஜனாதிபதி செயலகப் பிரதானி சாகல ரட்நாயக்ககவுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
அதை நாம் வரவேற்கின்றோம், ஆனால் இந்திய மத்திய அரசுடனோ தமிழ்நாட்டு அரசுடனோ இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பில் எது குறித்து பேசப் போகிறோம் என பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் கேட்க வேண்டும்.அல்லது பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறில்லாமல் வெறுமனே அரசியல் நீதியான பேச்சு வார்த்தைகளை நடத்திவிட்டு வடபகுதி மீனவர்களை ஏமாற்றக் கூடாது.
ஏற்கனவே இவ்வாறு பல பேச்சுவார்த்தைகள் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆகவே இந்திய அரசாங்கத்துடன் மீனவர் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் நல்லெண்ண அடிப்படையாக இந்திய மீனவர்கள் யாழ் கடற் பகுதிக்கு வருவதை நிறுத்துவதை இந்தியா மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்