
ராஜபக்சவினர் மிகவும் வலுவாகவே உள்ளனர்
ராஜபக்சவினர் மிகவும் வலுவாக இருக்கின்றனர். அவர்கள் பலவீனமாக இருந்தால் எவரும் விமர்சிக்க மாட்டார்கள். மகிந்த ராஜபக்ச பலவீனமாக இருந்தால் எவரும் அவரை திட்டமாட்டார்கள்.
தேர்தல் நடக்கும் போது நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் கூறிய அவர் மேலும் கூறுகையில்,
மகிந்த ராஜபக்ச மீதுள்ள பயம் காரணமாகவே அனுரகுமார திஸாநாயக்க, அவரை மிக மோசமாகத் திட்டுகிறார்.
நாட்டில் தற்போதும் மிகப் பெரிய கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே இருக்கின்றது. இதன் காரணமாகவே அனுரகுமார போன்றவர்கள் எமது கட்சியை விமர்சிக்கின்றனர்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் பாடத்தை தற்போது மக்கள் துன்பபட்டுக்கொண்டு கற்று வருகின்றனர். போராட்டம் நடத்தியதன் மூலம் கிடைத்த பிரதிபலன் அருமையாக இருக்கின்றதல்லவா?.போராட்டம் என்ற வார்த்தையை கேட்கும் போது மக்கள் பயப்படுகின்றனர்.
பொது வேட்பாளர் பற்றி பேசினாலும் கடந்த காலங்களில் பல பொது வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பொது வேட்பாளர் போல் ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளரை கொண்டு வந்ததன் காரணமாக நாடு அழிந்து போனது.
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றன. இதனால் நாங்கள் எதற்கும் அவசரப்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.