
வெளிநாட்டுத் தூதுவர்கள் மூலம் ரணில் -சஜித்தை இணைக்க முயற்சியா?
ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்கள் மற்றும் சில வதந்திகள் பரப்பப்படுகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகளை பயன்படுத்தி சஜித்தையும் ரணிலையும் இணைக்க பெரும் அரசியல் தந்திரங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றன.
வெளிநாடுகளின் தூதுவர்களும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் வெளிநாட்டு தூதுவர்கள் எமது நாட்டின் உள்ளக அரசியல் திருமணங்களுக்காக என்னுடன் கதைத்ததில்லை. அவை முழுப்பொய்யே. பணம் கொடுத்தே இவ்வாறான பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த பொய்யை மக்களிடையே பரப்புபதை உடனடியாக நிறுத்துங்கள் என்று கோருகின்றேன்.
எங்களுக்கு அரசியல் டீல்களை போட வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களின் முழுமையாக ஆதரவு உள்ளது. எங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

