
சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதி – சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள்
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் பிரேதப்பெட்டியுடன் இன்று கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று மாலை கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு பிரேதப்பெட்டியுடன் ஊர்வலமாகவந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 17ஆம் திகதி ஆயலம் ஒன்றில் களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த சிறுவன் புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த சிறுவன் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உடற் கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவர் காப்பக பெண்னொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவனை கைதுசெய்துள்ளது தொடர்பில் கொக்குவில் பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த போராட்டம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனை பாதுகாப்பான முறையில் வைக்காமல் சிறுவன் உயிரிழப்பதற்கு பொலிஸாரே காரணம் என குற்றச்சாட்டுகளை தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது பொலிஸ் நிலையத்தின் நுழைவாயில் பூட்டப்பட்ட நிலையில் போராட்டம் நடாத்தப்பட்டது.






மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
விளக்கு, மணி, சாம்பிராணி தட்டை திருடியதாகக் கைது செய்யப்பட்ட சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
16/11/2023 – விளக்கு, மணி, சாம்பிராணி தட்டு ஒன்றை திருடியதாகக் கூறி 14 வயதுடைய தர்ஷாந்த் என்கிற சிறுவனை சந்தேகத்தின்பேரில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
17/11/2023 – நீதிமன்றத்தில் மறுநாள் ஆஜர்ப்படுத்தியதைத் தொடர்ந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு இந்த சிறுவனை அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
29/11/2023 – சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பாறை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டப் பிரேதப் பரிசோதனையில் சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தனது மகன் கொலை செய்யப்பட்டிருப்பதாக சிறுவனின் தந்தை கூறுகிறார்.
படம் – சிறுவன் கைவிலங்கிட்டு பொலிஸ் நிலையத்தில் இருக்கும் காட்சி.


