
கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி; வீதிக்கு கீழே பெருமளவு மனித உடல்கள் இருக்கலாம்; அச்சம் தெரிவிக்கிறார் சட்டத்தரணி நிறஞ்சன்
வீதியின் கீழே பெருமளவான மனித உடல்கள்(எலும்புகூடுகள்) இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில் அது தொடர்பாக தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் எட்டாவது நாள் நேற்றையதினம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 39 மனித எலும்புகூடுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கு நான்கு அடி, பதின்நான்கு அடி நீள அகலமுள்ள குழியில் அகழ்வுப்பணி இடம்பெற்று வருகின்றது. இது தமிழீழ விடுதலை புலிகளின் உடல் கள் என நம்பப்படும் மனித எலும்புகூடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனையில் வீதிக்கு மேற்கு பக்கமாக உள்ள வீதிக்கு கீழே பெருமளவான மனித உடல்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அது தொடர்பாக நீதிமன்றில் இன்று ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று இது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படவுள்ளது
இந்த அகழ்வுப்பணியானது இரண்டாம் கட்டமாக தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. இன்றுடன் இந்த 2ஆம் கட்ட அகழ்வுப்பணி நிறுத்தப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. அதற்கான செலவுத் தொகை தீர்மானிக்கப்படும்.
அத்தோடு பெருமளவான மனித உடல்கள் அந்த பகுதிக்குள் இருக்கலாம் என அச்சம் அடைகின்றோம்.இந்த அகழ்வுப்பணி இன்றும் தொடர இருக்கின்றது. இதுவரை விடுதலை புலிகள் என சந்தேகிக்கும் 39 பேரின் எலும்புக் கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.