
இலங்கை ‘கடற்கொள்ளையர்கள்’ அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கத்தி முனையில் கொள்ளை
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவரக்ள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கத்தி முனையில் மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டுழியமும் அதிகரித்துள்ளது. மீன் படிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன், ராமகிருஷ்ணன், மதியழகன், குமாரவேல் ஆகியோர் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான பைபர் படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே எட்டு நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத 2 இலங்கை தமிழ் பேச தெரிந்த மீனவர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரும் தமிழக மீனர்வர்கள் 4 பேரையும் கத்தியை காடி மிரட்டியுள்ளனர். பின்னர் தமிழக மீனவர்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இனி இங்கு வரக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ராமகிருஷ்ணன் பொலிஸில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் இறுதியில், நாகையில் 15 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.