
இனப் பதற்ற நிலை, ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல் நாட்டிற்கு பெரும் ஆபத்து வருமா?
நாட்டில் இனக் கலவரங்கள் ஏற்படக்கூடுமென புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் தொடர்பில் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் குருந்தூர் மலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இனக்கலவரங்கள் ஏற்படலாம் என்றும் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல்கள் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அண்மைக் கலமாக வெளியாகும் செய்திகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
கடந்த தினங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களில், பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விடுத்து வரும் எச்சரிக்கைகள் தொடர்பில் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பெரும் மோதல்கள் ஏற்பட்டு மேலும் கலவரமான நிலைமை மற்றும் மேலும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களிலும், உள்நாட்டு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின்றன. இது மிகவும் அச்சமிக்க விடயமாகும். இது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான விடயமாகும்.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திடம் விசேட கோரிக்கையொன்றை விடுகின்றோம். உடனடியாக அனைத்து கட்சிகளையும் அழைத்து இவ்வாறான விடயம் உண்மையா? பொய்யா? என்று கூற வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதனால் இந்த விடயம் தொடர்பில் இந்த சபையின் அவதானத்தை செலுத்தி அனைத்து அரசியல் தரப்பினரையும் தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

