”பௌத்த தொல்லியல்” பகுதியாக குருந்தூர் மலை விரைவில் பிரகடனம்

”பௌத்த தொல்லியல்” பகுதியாக குருந்தூர் மலை விரைவில் பிரகடனம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய சட்ட ஆலோசனைகளுக்கு ஏற்ப குருந்தூர் மலையை ”பௌத்த தொல்லியல்” பகுதியாக ‘பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் சுயாதீன எதிரணி எம்.பி.யான ஜயந்த சமரவீர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஜயந்த சமரவீர எம்.பி. வாய்மூல விடைக்கான வினா நேரத்தில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலை பகுதியில் பிரிவினைவாத மற்றும் அடிப்படையாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளின் தலைமைத்துவத்தில் கடந்த 14 ஆம் திகதி பொங்கல் பொங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் தலையீட்டினால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

குருந்தூர் மலை 1931 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘பௌத்த தொல்லியல் பிரதேசம் ‘என வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் பிற்பட்ட காலங்களில் அப்பகுதில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.இருப்பினும் குருந்தூர் மலையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கும்,இந்து வழிபாடுகள் இடம்பெற்றதற்கும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில் குருந்தூர் மலைப் பகுதியில் தமிழ் அடிப்படைவாதிகள் முரண்பாடுகளை தோற்றுவிக்கிறார்கள்.இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.இல்லையென்றால் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும்.எனவே பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் குருந்தூர் மலையை ”பௌத்த தொல்லியல்” பகுதி என ஏன் இதுவரை பிரகடனப்படுத்தவில்லை என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கேள்வி எழுப்பினார்.

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இதற்கு பதிலளிக்கும் போது,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன .சட்ட ஆலோசனைகளை பெற்று ஜயந்த சமரவீர எம்.பி.முன்வைத்த யோசனையை(”பௌத்த தொல்லியல்” பகுதி) செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )