பேரறிவாளன் விடுதலை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பேரறிவாளன் விடுதலை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பு வெளியான நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில், அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். மேலும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். முன்னதாக இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு 2014ம் ஆண்டு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது.

ஆனால், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கில் முக்கிய வாதங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, “யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் அவர் (பேரறிவாளன்) ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், “அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர், மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்து, வழக்கு விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?

இதையடுத்து, கடந்த 4ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, ”விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?,” என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, ”30 ஆண்டுகள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்னடத்தையில் பிரச்னை இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.” என்றனர்.

மேலும் ‘குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், “அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது அரசியல்சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு மே 11 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

பேரறிவாளன்

அப்போது, ‘விடுதலை குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநர் பல ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளார். இது குறித்து என்ன சொல்கிறீர்கள்? அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? ஆளுநர் தொடர்புடைய வழக்கில் நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள்?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நட்ராஜ், ‘மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில் கருணை அல்லது நிவாரணம் அளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆகையால், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆளுநரின் முடிவு சரியானதுதான்.’ என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி கூறுகையில், “மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படிதான் விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இது, அரசியல் சாசனப்படி தவறானது.’ என்றார்.

மேலும், ‘இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வருகிறது. கொலை வழக்கின் கீழ் முடிவு செய்ய மத்திய, மாநில இரு அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்குத்தான் முக்கியத்துவம் முன்னுரிமை.’ என்று மத்திய அரசு வழக்குரைஞர் கூறினார்.

இதை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் மறுத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றால், விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்கிற வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம், ஒழுங்கு சார்ந்த வழக்குகள். இதில், மாநில அரசுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளது.’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )