
மரண தண்டனைக் குற்றவாளிகள் கப்பக்காரர்கள் அமைச்சரவையில்
மரண தண்டனை குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள்,கப்பம் பெற்றவர்கள் பல வழிமுறையில் சட்டத்தில் இருந்து தப்பித்து அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். அரசியல்வாதிகள் மனித படுகொலையிலும் ஈடுபடலாம் அவர்களுக்கு ஒரு நீதி சாதாரண மக்களுக்கு பிறிதொரு நீதி, இதுவே இன்றைய உண்மை என ஜே .வி.பி. எம்.பி.யான விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகளிலும் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும்.ஏட்டில் உள்ள சட்டங்கள் சமத்துவமான முறையில் செயற்படுத்தப்படுகிறதா என்பதே இன்றுள்ள பிரதான பிரச்சினை.
நாட்டின் பொருளாதார படுகொலையாளர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டின் மீது நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். கடந்த காலங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தரும் போது பஷில் ராஜபக்ஸ அதிகாரத்தில் இருக்கிறாரா, இல்லையா என்று பார்ப்பார்கள். அவர் இருந்தால் திரும்பிச் சென்று விடுவார்கள்.இது நாட்டு மக்கள் அறிந்த உண்மையே .வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவருக்கும் கப்பம் செலுத்தாமல் இலங்கையில் தமது முதலீடுகளை செய்வது உலக அதிசயம்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் கப்பம் பெறும் கலாசாரம் இல்லாதொழிக்கப்படவில்லை.நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டு மக்கள் நீதிமன்ற கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
மரண தண்டனை குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள்,கப்பம் பெற்றவர்கள் பல வழிமுறையில் சட்டத்தில் இருந்து தப்பித்து அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.ஆனால் சாதாரண மக்கள் சிறு குற்றம் செய்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதுவே இன்றைய உண்மை என்றார்.

