
குருந்தூர்மலை விகாரைக்கு தமிழர்களால் ஆபத்து வரும்; ஜனாதிபதிக்கு எல்லாவல மேதானந்த தேரர் கடிதம்
வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தி அல்லது குருந்தூர்மலை ஆலயத்திற்குச் சொந்தமில்லாத சுற்றுப்புறக் காணிகளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு தொடர்பில் தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குருந்தி விகாரையை சூழவுள்ள காணிகள், இனவாதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் தமிழ் மக்களின் கைகளுக்குச் சென்றால் எதிர்காலத்தில் அந்தப் பிரதேசம் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அக்கடிதத்தில் எல்லாவல மேதானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘குருந்தி விகாரைக்குச் சொந்தமில்லாத காணியை பொதுமக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டேன். குருந்தி விகாரையைச் சுற்றிலும் பல்வேறு புத்த மடாலயங்களின் இடிபாடுகள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன.
எனவே, இந்த நிலங்களை அங்குள்ள இனமதவாதத் தமிழர்களுக்கு பகிர்ந்தளிப்பது ஏற்புடையதல்ல. பௌத்த விகாரைக்கு அருகில் இவ்வாறான போராட்டங்களை ஆதரிக்கும் மக்களுக்கு காணி வழங்குவது ஏற்புடையதல்ல.இதன் மூலம் பௌத்த இடிபாடுகளுக்கு அருகில் இனமதவாத காலனிகள் உருவாகும். இப்போதும் அந்த நிலத்தை அரசு கொடுத்ததோ இல்லையோ வலுக்கட்டாயமாக அபகரித்து விட்டதாகவே தெரிகிறது.
எனவே இந்த காணிகளின் உரிமையை மாற்றக்கூடாது எனவும் எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

