அம்மாவைப் பார்க்க இலங்கை செல்வதற்கு அனுமதியுங்கள்; பிரதமர் மோடிக்கு சாந்தன் உருக்கமான கடிதம்

அம்மாவைப் பார்க்க இலங்கை செல்வதற்கு அனுமதியுங்கள்; பிரதமர் மோடிக்கு சாந்தன் உருக்கமான கடிதம்

”32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த டி.சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் நவம்பர் 11, 2022 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஆனால் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சாந்தன், சிறப்பு முகாமுக்குள் தனது வாழ்க்கையைப் பற்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதில் சூரிய ஒளி கூட எங்களின் உடலைத் தொடாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தான் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதிய போதிலும் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அடையாளச் சான்றினை புதுப்பித்துக் கொள்ள சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை அணுகியதாகவும் சாந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கும் அவர்களிடம் இருந்து பதில் இல்லை என கூறியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். 120 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு முகாமில் வசிக்கின்றனர், அவர்களில் 90 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள், ”என்று கடிதத்தில் கூறப்பிட்டுள்ளார்.

மேலும், சிறப்பு முகாமில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. “ராஜீவ் காந்தி வழக்கில் விடுவிக்கப்பட்ட நாங்கள் நான்கு பேர், ஜன்னல்கள் தகர தாளால் மூடப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்” என்று அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும் , “ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஒரு அறையில் இருக்கும்போது, நானும் முருகனும் மற்றொரு அறையைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் எங்கள் அறைகள் ஒன்றுக்கொன்று அருகில் இல்லை. எங்களால் ஒருவருடன் ஒருவர் பேசவோ பழகவோ முடியாது என்று சாந்தன் கூறினார்.

இரத்த உறவினர்கள் மட்டுமே கைதிகளை சந்திக்க முடியும். “என்னைப் போன்ற ஒரு வெளிநாட்டவருக்கு, இந்தியாவில் இரத்த உறவினரை எப்படி இருக்கும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்களுக்கு அரசு நாள் ஒன்றுக்கு ரூ.175 வழங்கியதாக கூறினார். “32 வருடங்களாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை. எனது தந்தையின் கடைசி ஆண்டுகளில் என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. என் அம்மாவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க வேண்டும் என்ற எனது ஆசை ”என்று அவர் கடிதத்தில் எழுதினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )