அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு; பெரும்பான்மை ஆதிக்கம் சுமந்திரன் கண்டனம்

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு; பெரும்பான்மை ஆதிக்கம் சுமந்திரன் கண்டனம்

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை ஆதிக்கத்தை செலுத்துவதாகவே அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு,முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாக்கெடுப்பில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம். முன்னர் எடுத்த தீர்மானத்தையே எடுக்கின்றோம்.

வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போது அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். நல்லெண்ண விடயமாக நாங்கள் இன்று அரசாங்கத்தை எதிர்க்க மாட்டோம்.

இதேவேளை சபாநாயர் கூட்டமொன்றை கூட்டியுள்ளார். அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான பெயர் பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கான 7 உறுப்பினர்கள் விடயத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுடன் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்படுபவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும். இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாகும். அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியினால் கபீர் ஹாசிமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாங்கள் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தமிழ் கட்சியின் தரப்பில் ஒருவரை பரிந்துரைத்தோம். ஆனால் அந்த நபரை இந்த பாராளுமன்றத்திற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக பாராளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தரப்பினர் எதிர்த்துள்ளனர்.

இது பெரும்பான்மை மனோபாவத்திற்கே போகின்றது. அத்துடன் இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகவும் அமையும் என்றார்.

இதனை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகையில்,

அரசியலமைப்பு சபைக்கு அரசாங்க பக்கத்தில் இருந்தும் பிரதான எதிர்க்கட்சியில் இருந்தும் தவிர வேறு கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது பிளவு ஏற்பட்டதாகவும், இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பாக அமையும் என்றும் சுமந்திரன் கூறுகின்றார். இது இந்த சபையை தவறாக வழி நடத்துவதாக அமையும்.

சுமந்திரன் தரப்பில் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதன்போது மேலும் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சிகள் சார்பாக கம்மன்பிலவில் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதன்போது சுமந்திரன் குழு எங்களின் பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று நாங்களும் அவர்களின் பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களில் சிலர் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது அவருக்கு ஆதரவாக வாக்களித்தவர்களே. அவர்கள் அந்தப் பக்கத்தில் என்ன செய்வார்க்கள் என்று தெரியும். இதனாலேயே நாங்கள் எதிர்த்தோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )