
தமிழரசு கட்சியிலிருந்து விலகினார் பரஞ்சோதி; மாவை வினைத்திறனுடன் இல்லை என குற்றச்சாட்டு
தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாதிருக்கின்றமையால் தமிழரசு கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
கோப்பாய் தொகுதி சம்பந்தமானகவும் கட்சி சீர்திருத்தம் தொடர்பாகவும் நான் பல தடவைகள் கட்சி தலைமைப்பீடத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி இருந்தேன்.இவை தொடர்பில் உரிய பதில்கள் எனக்கு கிடைக்கவில்லை.அத்துடன் நடடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை.
இந்நிலையில் மத்திய குழுவில் குறித்த விடயங்கள் தொடர்பில் பேசப்பட்ட போது; மூத்த துணை தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொருளாளர் கனகசபாபதி, தலைவர் மாவை சேனாதிபதி ஆகியோர் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழுவுடன் கலந்தாய்ந்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த மாதம் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய வீட்டில் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழு கூட்டப்பட்டது. இதன் போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒப்பந்தத்தின்படி ரெலோ கட்சியை சேர்ந்த கோப்பாய் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இதனை செயற்படுத்த தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா தவறியுள்ளார். இதன் அடிப்படையில் கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையில் அவர் காணப்படுகின்றார் என்பது வெளிப்படுகின்றது. இதனடிப்படையில் தமிழரசு கட்சியின் உபகுழுக்கள் மத்திய செயற்குழு கோப்பாய் தொகுதி கிளை குழுவின் இணைத் தலைவர் ஆகிய சகல பதவிகளில் இருந்து நான் விலகுவதாக கட்சித் தலைவர் மாவை சேனா ராஜாவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

