
புலம்பெயர் தமிழர் தரப்புடன் அரசின் பேச்சுகள் ஆரம்பம்
புலம்பெயர் தமிழர்களின் தடைகளை நீக்கிய அரசாங்கம் அவர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.
ஊடகம் ஒன்றின் தகவல்படி, முதலாவது கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைத் தொடர்பின் ஊடாக இடம்பெற்றுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் என்ற, கனடாவை தளமாகக் கொண்ட புலம்பெயர் அமைப்பு மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உட்பட நான்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கனேடிய அமைப்பு, ரோய் சமாதானம் என்பவரால் வழிநடத்தப்பட்டது அவர் நிரபராதியாகி விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது தமிழ் புலம்பெயர் சமூகம், விவாதங்களைத் தொடர இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்துதல் என்பன அவையாகும். அத்துடன் புலம்பெயர் பிரதிநிதிகள் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு தரப்பினரால் பலவந்தமாக காணி சுவீகரிப்பு விடயத்தையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர், காணிகளை அவற்றின் உண்மையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
இந்த கலந்துரையாடலை அடுத்து புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றை நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அதன் உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பு ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார்
இந்தப் பிரச்சினையை அடுத்த தலைமுறை தீர்ப்பதற்கு இடமளித்துவிடக் கூடாது. இயன்றளவு விரைவாக இந்தக் குறைகளை களைந்து நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.
தற்போது 20 தமிழ் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 கைதிகளுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்