
சீனக் கப்பலின் வருகை; ரணில் மௌனம் சாதிப்பது ஏன் ?
சீன ஆய்வுக் கப்பலை திரும்பி அனுப்புவது என்பது ஊருக்குள் வரும் பாண் வண்டியை திருப்பி அனுப்புவது போன்ற விடயம் அல்லவெனவும், இதனால் ஏற்படக் கூடிய நெருக்கடிகள் மேலும் அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கை நோக்கி வரும் சீனக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெதியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் பிரச்சனைகளுக்குளட சிக்கியுள்ள நேரத்தில், புதிதாக சீனாவின் ஆய்வுக் கப்பல் தொடர்பான பிரச்சனையும் உருவாகியுள்ளது. இந்தக் கப்பல் இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எமது நாடு மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலின் வருகையை தாமதிக்குமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சீன அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு சென்றதால் சீனாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இலங்கையால் மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளன. அந்தக் கப்பல் இலங்கை வருவது தொடர்பில் நாட்டு மக்களிடையே அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பலம்பொருந்திய நாடுகளுக்கிடையே நடக்கும் மோதலில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் சீனாவுடனும் மறுபக்கத்தில் இந்தியாவுடனும் தொடர்புகளை இலங்கை பேணி வருகின்றது. இந்தக் கப்பல் பிரச்சினையால் இந்த நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி இதுவரையில் ஒரு வசனமும் கதைக்கவில்லை. அரசாங்கமும் இன்னும் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அந்தக் கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது ரணில் ராஜபக்ஷ அல்ல. எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுவர். இதனால் அந்தக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் இப்போதே தமது நிலைப்பாட்டை கூறி தெளிவுப்படுத்த வேண்டுமம்.
ஜனாதிபதி, பிரதமர் அல்லது வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் அறிவிக்க வேண்டும். இதனை செய்யாது மௌமாக இருப்பது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலையே ஏற்படுத்தும்.
இலங்கையின் மௌனத்தால் ஏற்கனவே அந்தக் கப்பல் அம்பாந்தோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தக் கப்பலை திரும்பி அனுப்புவது என்பது ஊரில் பாண் வண்டியை திருப்பி அனுப்புவது போன்ற விடயமல்ல என்பதனையும் கூறிக்கொள்கின்றோம் என்றார்.

