
தமிழ் தெரியாததால் கஷ்டப்பட்டோம்; யாழில் பிக்குகள் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர் என கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட பிக்குகள் தெரிவித்துள்ளனர்
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த பிக்குகள் முன்னதாக யாழ் . பொது நூலத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் , நூலகர்களுடன் கலந்துரையாடி புத்தகங்களையும் அன்பளிப்பு செய்தனர்.
தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கும் , யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கும் நூல்களை பகிர்ந்தளித்தனர்.
அதன் பின்னர் மாலை வலி. வடக்கு பிரதேசத்திற்கு சென்று அப்பகுதிகளை பார்வையிட்டதுடன் , மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றதுடன் , ஆலய குருக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நேற்றைய தினம் காலை நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதியுடனும் கலந்துரையாடினர்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நாம் எந்த வித இடர்களுக்கும் முகம் கொடுக்கவில்லை. யாழ்ப்பாண மக்கள் அன்பாக வரவேற்றனர். எமக்கு மொழியே தடையாக இருந்தது. தமிழ் மொழி தெரியாததால் , மக்களுடன் பேச முடியாது இருந்தது.
சிங்களத்தில் பேசும் போது, அவர்களுக்கு சிங்கள மொழியை நன்றாக விளங்கி கொள்ள முடியாது இருந்தது. நாம் தமிழ் பேசிய போது, சந்தோசமாக எம்முடன் பேசினார்கள்.
தமிழ் மொழியை கற்றுக்கொண்டு , நாம் இங்கே வந்தால் மிக பயனுள்ளதாக எமக்கு இருக்கும்.
ஏழை மக்கள் தென்னிலங்கையிலும் அதிகளவில் உள்ளனர். ஆனாலும் நாம் வடக்கு மக்களுக்கு உதவ வேண்டும் எனும் நோக்குடன் இங்கே வந்து இந்த மக்களுடன் பழகி சிலருக்கு உதவியுள்ளோம்.
எமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

