
போராட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி ரணில் கடும் எச்சரிக்கை; சாட்டையை சுழற்றுகிறார் ரணில்
மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தமை சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்
இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் போராட்டம் மாற்று வழியில் பயணிக்கின்றது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய வேண்டும். அவர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
போராட்டம் என்ற போர்வையில் அரசாங்கத்தை கவிழ்க்க, வீடுகளை எரிக்க, ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களை கைப்பற்றுவது ஜனநாயகம் அல்ல. அது சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக செயல்படுவோம். போராட்டத்தின் ஊடாக இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பினால் அதற்கு முழு ஆதரவு அளிப்பேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

