
ரணிலைக் கைது செய்தது போல் மகிந்தவையும் சிக்க வைக்க முயற்சியா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்யவுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சுக்காக வரி இல்லாத அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்தொன்று, கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அக்காலத்தில் ஜனாதிபதி செயலாளர் திணைக்களத்தில் பணியாற்றிய மேலதிக செயலாளரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவிருந்தபோது அவரின் செயலாளர்களாகவிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அநு ரகுமார அரசினால் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது அவரின் செயலாளராகவிருந்தவரிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளதால் மஹிந்த ராஜபக்சவும் விரைவில் கைது செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.