இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதா?

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதா?

இந்தியாவில் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கடுவலையில்   இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதியான தயான் ஜயதிலக இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் தெரிவித்திருக்கின்றார்.

அதற்கமைய குறித்த 7 ஒப்பந்தங்களில் ஒன்று இந்தியாவில் ஏதேனும் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடாகும்.

இதில் உள்ள அபாய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையில் மோதல்கள் காணப்படுகின்றன.

அவை தீவிரமடைந்து யுத்த நிலைமை ஏற்பட்டால் இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்று சிந்திக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் நாமே போய் சிக்கிக் கொள்கின்றோம்.

முந்தைய அரசாங்கங்கள் மிகத் தெளிவாக அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றின. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அல்ல.

நாம் இந்தியாவுடன் சிறந்த உறவைப் பேண வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தேவைக்கு அதிகமாக இடத்தை வழங்கும் போது பிரச்சினைகள் தோற்றம் பெறும்.  என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )