
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி மூடப்பட்டது
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு 2023 யூன் மாதம் 29 ஆம் திகதி இனம்காணப்பட்டு மூன்று கட்டங்களாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று 16 ஆம் திகதியுடன் மூடப்பட்டுள்ளது.
முதல் இரண்டு கட்டங்களின் போது 40 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரை 12 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் மனிதப் புதைகுழி நேற்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் தலைமையில் கண்காணிக்கப்பட்டு அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டுரப்பட்டன.
இறுதி நாளான நேற்று முன்தினம் சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா,பேராசிரியர் ராஜ்சோமதேவா,காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன்,பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொக்கிளாய் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொக்கிளாய் பகுதி கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிபதி முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
52 மனித எச்சங்களுடன் சான்று ஆதாரப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன தொல்பொருள் பேராசிரியர் ராஜ்சோமதேவ மற்றும் ஸ்கான் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இந்த மனிதப் புதைகுழியை மேலும் நீடிப்பதற்கு(தோண்டும்)சாத்தியக்கூறுகள் இல்லை என்ற நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் புதைகுழி நேற்று பகுதியளவில் மூடப்பட்டது.
இன்னும் ஒருசில தினங்களில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகத்தினை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு முற்றுமுழுதாக இந்த மனிதப் புதைகுழிகளை மூடுவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்தியஅதிகாரி க.வசுதேவா தெரிவித்தார்.
இந்த மனிதப் புதைகுழி மூடும் போது நிலத்தில் குற்றவியல் பிரதேசம் என்ற எச்சரிக்கை துண்டு வழக்கு எண் ஏ.ஆர் 804/ 2024 என்றும் குற்றவியல் நீதிமன்றம் முல்லைத்தீவு 2023-2024க்கு இடையில் தோண்டப்பட்டது என்றும் எழுதப்பட்ட, மண்ணுள் பிரிகையடையமுடியாத இறப்பர் போட்களும் போடப்பட்டு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.