அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கினால்பெரும் ஆபத்து

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கினால்பெரும் ஆபத்து

விடுதலை புலிகளை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும்,இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை எனக்கேள்வி எழுப்பிய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுகிறார். யாழ்ப்பாணத்துக்கு சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சந்தித்து சுயநிர்ணயம் பற்றி பேசியுள்ளார் எனக் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பி, குற்றம்சாட்டிய அவர்மேலும் பேசுகையில்,

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்துக்கு எதிரான செயற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த 30/1 பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரணை வழங்கியது.இதன் பின்னரே இராணுவத்துக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 30/1 பிரேரணையில் இருந்து விலகிய போதும் அப்பிரேரணையின் உள்ளடக்கங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் காரியாலயம் கூறியுள்ளமை சாதாரணவிடயமல்ல.

விடுதலை புலிகள் தற்போது பகிரங்கமாக நினைவு கூரப்படுகின்றனர்.கடந்த வாரம் இடம்பெற்ற நினைவேந்தலில் பலர் பங்கு பற்றியிருந்தார்கள்.வெள்ளையர்களும் கலந்து கொண்டார்கள்.சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட்டும் முள்ளிவாய்க்கால் சென்று விடுதலைப் புலி களை நினைவு கூர்ந்தார்.இந்த யுத்தத்தில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும்,இராணுவத்தினரையும் ஏன் அவர் நினைவு கூரவில்லை?

இதேவேளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுகிறார்.வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார்.யாழ்ப்பாணத்துக்கு சென்று விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சந்தித்து சுயநிர்ணயம் பற்றி பேசியுள்ளார்.ஆகவே இவரது செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )