4 முஸ்லிம் இளைஞர்கள் கைதின் பின்னணியில் இருப்பது என்ன?; மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதமெனப் புரளி

4 முஸ்லிம் இளைஞர்கள் கைதின் பின்னணியில் இருப்பது என்ன?; மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதமெனப் புரளி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். இப்போது இந்த 4 இலங்கை முஸ்லிம் இளைஞர்களும் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டமும் இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் கால கட்டம். இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டம். இந்நிலையில் இலங்கையில் நடந்த தாக்குதலுடன் இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருபதையும் நாம் மறந்துவிடக்கூடாதென அரச தரப்பு எம்.பி.யான எம்.முஷாரவ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பாக இந்த சபையில் உறுப்பினர் ஒருவர் , முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் இருக்கிறது. சில காலங்களுக்கு முன்னரும் இது தொடர்பாக சபையில் தெரிவித்திருந்தேன். அதன் பிரகாரம் தற்போது இந்தியாவில் 4இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் இலங்கையில் மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைதூக்கி வருகிறது என மிகவும் கடும் தொனியில் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் ஐ,எஸ்.ஐ.எஸ். இந்த தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என உரிமை கோரியது..ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு பல வருடங்கள் கடந்தும் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்தத் தாக்குதலில் ஐ,எஸ்.ஐ.எஸ்.ஸுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அனைத்து விசாரணை குழுக்களும் தெரிவித்துள்ளன.

நிலைமை இவ்வாறிருக்க , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். ஐ.எஸ்.அமைப்பு உரிமை கோரியது என்றும் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் பக்தாதி, தான் உயிருடன் இருக்கிறேன் என அறிவித்தார் என சொல்லப்பட்ட விடயங்களுக்கு பின்னால் தேசிய, சர்வதேச பெரும் சதி இருப்பதை எமது நாட்டு மக்கள் இப்போது புரிந்திருக்கின்ற சூழலில்தான், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸுடன் தொடர்புபடுத்தி. இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் மேலும் தலைதூக்கப் போகிறது என்ற போர்வையில் தற்போது சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். இப்போது இந்த 4 இலங்கை முஸ்லிம் இளைஞர்களும் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம். இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டம். அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எமக்கு எழுந்தால் அதனை யாரும் மறுத்துவிட முடியாது.

அன்றும் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்கள்.தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறுபட்ட சம்பவங்கள் கருத்துக்கள் இருக்கின்ற நிலையில், புதிதாக வந்திருக்கும் இந்த செய்தி குறித்து நாட்டில் இருக்கின்றன சிங்கள,தமிழ்.முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். மீண்டும் ஒரு தேர்தலை வெற்றிகொள்வதற்காக இவ்வாறான தாக்குதல் அல்லது பயங்கரவாதம் போன்ற பொய்யான கருத்துக்களைக் கொண்டு ஊடுருவுகின்ற அரசியல் சக்திகளை, தீய சக்திகளை தோற்கடிக்கின்ற பெரும்பாெறுப்பு இந்த தேசத்தில் இருக்கின்ற மக்களுக்குள்ளது.

உண்மையில் பயங்கரவாத்துடன் தொடர்புபட்ட யாராவது கைதுசெய்யப்பட்டிருந்தால் உரியமுறையில் விசாரிக்கப்பட்டு உரிய தகவல் தெரிவிக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு தேர்தலை மையப்படுத்தியதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப்போன்றதான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கின்ற நாேக்கில் இது நடைபெறுமாக இருந்தால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )