
அமைச்சரவையில் மாற்றம் வருகிறது; மொட்டுத் தலைவர்கள் ரணிலுடன் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மொட்டுக் கட்சியின் பிரதானிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நடைபெறவிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை ஐந்து மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தில் கூடுதல் பொறுப்புகளை வழங்குதல், பாராளுமன்ற மேற்பார்வைக்குழுக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பதவிகள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவிருந்தது.
பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தம் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் பொதுச் செயலளார் சட்டத்தரணி சாகர காரியவசம், கட்சியின் பொருளாளர் பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொகுகே உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகளே இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவிருந்தனர்.
ஜனாதிபதி தரப்பில் ஜனாதிபதியுடன் சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்த்தன உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தச் சந்திப்பின் பின்னர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.