
யாழ் இளைஞன் படுகொலை ஐந்து பொலிஸாரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணம் சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை எடுத்து கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையில் 50 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
அவர் கருத்து தெரிவித்த போது,
மேற்படி விசாரணை வியாழக் கிழமை பிற்பகல் ஆரம்பமாகி இதுவரை நடைபெற்ற மரண விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதிமன்றம் சில கட்டளைகளை வழங்கியுள்ளது.
சாட்சி வழங்கிய ஐந்து சாட்சிகளில் மூன்றாவது சாட்சியாக இருந்தவர் இறந்தவருடன் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறியதைக் கொண்டு சாட்சியின் பெயர் குறிப்பிட்டுக் கூறிய இரண்டு பொலிஸாரை கைது செய்து,நீதிமன்றத்தில் முற்படுத்தமாறு யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு கட்டளையிட்டது.
பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் சாட்சி தாக்கப்பட்டதாக கூறியதையடுத்து,குறித்த இடங்களை விஞ்ஞான ரீதியாக அடையாளம் காண சாட்சியை அழைத்துச் செல்ல உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் விண்ணப்பித்தமைக்கு ஏதுவாக நீதிமன்றம் கட்டளையிட்டது.
இதன்போது சாட்சியின் பாதுகாப்புக் கருதி இரண்டு சட்டத்தரணிகள் உடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.சாட்சியினால் விபரமாகக் கூறப்பட்ட மூன்று பொலிஸாரின் அங்க அடையாளத்தை வைத்து மூவர் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
மன்றில் சாட்சியமளித்த சட்டவைத்திய அதிகாரி மயூதரன் சாட்சியின் காயம் குறித்து விபரித்துடன்,சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே மரணத்துக்கு பிரதான காரணம் எனக் கூறியதன் அடிப்படையில் நீதிமன்றம் குறித்த கட்டளையை வழங்கியுள்ளது.
மரண விசாரணைகளுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் வெளிநாட்டு பிரயாணத் தடை விதிக்க சட்டத்தரணிகள் கோரியபோதும்,உள்ளக ரீதியில் பிரயாணத்தடையை பொலிஸார் மேற்கொள்ள முடியுமென நீதிமன்றம் பணித்ததால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன்போது தங்களது விசாரணையில் நான்கு பொலிஸார் அடையாளம் காணப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன்,சாட்சியின் அடையாளத்தைக் கொண்டு மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.இதன் அடிப்படையில் இதுவொரு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இன்றைய நீதிமன்ற நடவடிக்கையில் யாழ்ப்பாணம்,வவுனியா என பல இடங்களில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் பங்கேற்றனர்.
குறித்த வழக்கின் விசாரணை தொடர்ந்து விரைவாக இடம்பெற ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.