கைதியின் இரவு!!

கைதியின் இரவு!!

-மிதயா கானவி-

மே 21, 2009, கொடிய இரவு.

ஆளையாள் இனம் காணமுடியாத கும்மிருட்டு, பெரிய மலைகளிலிருந்து உருளும் பாறாங்கல்லாய் பயங்கரமான மனிதர்களின் கர்ச்சனைகள் மனதில் ஆழமாய் இறங்கியது, அந்த சத்தங்களின் சிங்கள மொழியின் பொருள் நன்கு தெரியா விட்டாலும் அந்த ஒலியில் இருந்து வரும் வெப்பக் கீற்றுக்கள் உயிர்வரை சென்று சுட்டது.

எங்கிருக்கின்றோம்?, ஏன் பிடித்து வரப்பட்டோம்? என்று தெரியாவிட்டாலும், இனி என்ன நடக்கப் போகிறது என ஊகிக்க முடிந்தது. மரணபயம் அவர்களை அணுகவில்லை என்றாலும், ஒவ்வொரு அடிகளும் சாவை விடக் கொடூரமாக வலித்தன.

கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை என்றாலும் இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது: கைகள் விலங்கிடப்பட்டு கிடந்தார்கள்.
“வவுனியா யோசப் முகாம்” என்ற செய்தி அவர்கள் காதில் நுழையவே, முன்னர் அறிந்த அந்த வதைமுகாமின் கொடூர நினைவுகள் அவளிற்கு தலையைப்பிய்த்தது.

“ஆமியிடம் மட்டும் பிடிபட்டிராதேங்க தங்கச்சி. அவனைக் கண்டாலும் நிற்காமல் ஓடுங்கள்” என பிரசன்னா அண்ணா (மாவீரன்) சுகந்திரபுரத்தில் வைத்து சொல்லிச் சென்றதும் நினைவில் வந்து பல்குழலாய் வெடித்தது.

இப்போது என்ன செய்வது என்று எண்ணுவதற்கு எதுவுமில்லை. அவள் கைகள் கூட ஆறுதல் தர மறுத்தன. அங்கு இருந்த நிமிடங்கள் எல்லாம் வருடங்களைப் போல் கொடூரமாய் கழிந்தன. இரும்புச் சப்பாத்துகளால், தலை முதல் கால் வரை, ஏறி ஆள் மாறி மாறி மிதித்தார்கள்.

பெரிய வெளிச்சத்தை முகங்களில் பாய்ச்சி, மரநாய் கோழி பிடிப்பதைப் போல் ஆட்களை இனம் கண்டு ஒவ்வொருவராய் இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள் இராணுவத்தினரும் இலங்கை புலனாய்வாளர்களும்.

பிடிக்கப்பட்ட எல்லோரும் போராளிகளாய் இருந்தவர்கள் என்று சொல்ல முடியாது. இறுதிவரை முள்ளிவாய்க்கால் வரை பயணித்த எத்தனையோ தமிழ்ப் பெண்களும் இருந்திருந்தார்கள். ‘ஓ’ வெனக் கதறி அழ இப்போது எந்த சக்தியும் இருக்கவில்லை. இனி அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் துளியளவும் இருக்கவில்லை. ஆனாலும், எந்தக் கேள்வியுமற்று அடித்து, உதைத்து பாலியற் தொல்லைகளையும் கண்டமேனிக்குச் செய்யத் தொடங்கி விட்ட அந்த இரவில், இலங்கை இராணுவக் கொடூரர்களின் கட்டுப்பாடற்ற சித்திரவதைகளால் சிதைக்கப்பட்டு, அங்கு துடிதுடித்துக் கொண்டிருந்தவர்களில் அருளும் ஒருத்தி.

இனிக் கேட்பதற்கு யாரும் அங்கிருக்கவில்லை. சிரிப்பும், கனைப்பும், கும்மாளமுமாய்… சீருடை தரித்த மிருகங்கள் மனித வேட்டைகளை நடத்தி மகிழ்ந்த இரவொன்றின் கதை இது.

அவள் பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி அடி வாங்கி, வாங்கி திரும்பத் திரும்ப கதைத்தாள்… கத்தினாள்… இரக்கமற்ற இரும்பு கரங்களோடு இருந்தவர்களுடன் முரண்டு பிடித்தாள்.
“எல்லாம் முடிந்து போனபின் ஏன் அடிக்கிறான்? தயவு செய்து விட்டு விடு!! எனது குழந்தை இப்போ தாய்ப்பாலுக்காக அழுது கொண்டிருக்கும்…
நான் போராளி இல்லை..,, நான் ஓர் சாமானியப் பெண்….” என்றவளை
“நீ ஒரு பன்னி வேண்டும் என்றால் சொல்லு, உன் பால் குடிக்க பன்றிக் குட்டிகளை விடுறன்” என்றான் ஒரு இராணுவ மிருகம் அரைகுறைத் தமிழில்,
அந்த பெண் பதிலுக்கு திரும்ப கெஞ்சினாள்…. “விட்டு விடு!! என் கணவரும் இறந்து விட்டார்… விசாரித்து விட்டு உடனே விடுவதாக சொன்னதால் இரண்டு மாத குழந்தையை பக்கத்தில் கொடுத்து வந்தேன்….
என்னை ஏன் பிடித்தாய்?” என்று கதறினாள். எங்கள் எல்லா மனங்களையும் நாராய்க் கிழித்த அவளது கெஞ்சல்கள் அந்த அரக்க மனங்களை அசைக்கவேயில்லை, எந்த நீதி தேவதையும் வான்வழி இறங்கி வரவே இல்லை,

“இனி தமிழர்கள் எங்கள் அடிமைகள். நாங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். பெரிய மாத்தையா எல்லாம் சொல்லியாச்சு” என்றான். “நீ எதிர்த்துப் பேச முடியாது” என சப்பாத்து கால்களால் அவளது மார்பகங்களை மிதித்தான். வலிதாங்க முடியாது “ஓ…” வென கதறியவளது வாயினுள் குப்பைகளைத் திணித்து மகிழ்ந்தான்.

“ஏய்…!! கொட்டியாவை கூப்பிடு…! காப்பாற்ற வாறாங்களா என்று பார்ப்போம்!”

அருளாலும் எழுந்து இருக்கவே முடியவில்லை. கைகள் வலியின் மிகுதியால் சோர்வடைந்திருந்தன. நா வரண்டு தாகம் எடுத்து தவித்தது.
அருளிற்கு இரண்டு குழந்தைகள். அவர்களைப்பற்றி மனம் அப்போது நினைக்கவில்லை.

“கடவுளே!…. இவர்கள் என்னை உடனே சுட்டு விடவேண்டும்!!” என்று மனம் இரங்கி எல்லாக் கடவுளிடமும் வேண்டினாள்.
எட்டி உதைத்தார்கள்….. ஏறி மிதித்தார்கள்….. கேட்க யாருமற்று கலங்கி கிடந்தார்கள் அவர்கள்.

தமிழில் உள்ள அத்தனை கேட்ட வார்த்தைகளையும் சொல்லி காறி முகத்தில் துப்பினார்கள். முழுவதும் நனைத்தபின் முக்காடு எதற்கு என்று மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மன்றாடினார்கள் அவர்கள்… ‘மரணமே என்னை வந்து காப்பாற்றி விடு… உடம்பில் ஒரு ஒட்டு துணி மட்டும்… உயிர், மானம், பறிக்கப்பட்டு, உடல்மட்டும் கிழிபட்ட கந்தலாய்க் கிடந்தது.

காலை சூரிய உதயத்திற்கு முன் இந்த உயிர் பிரிய வேண்டி மண்டியிட்டுக் கிடந்தாள் அவள். இருள் முழுவதும் இரத்தத்தில் நனைந்து கொண்டது. ஆட்களை இனம் காண முடியாவிட்டாலும் பெண்கள்தான் என அறியமுடிந்தது.

உயிர் பிரியும் வலியை விட கொடுமையானது உரிமைகள் பறிக்கப்பட்டதன் வலி. ஆதனால், அருள் உணர்வுகள் சாகடிக்கப்பட்டு உணர்ச்சியற்ற நிலையி்ல் சடமாக்க் கிடந்தாள்.

இழப்பதற்கு எதுவும் இல்லாத போது எதைப்பற்றி சிந்திப்பது? மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைப் பார்வையிடுவது போல வந்த கும்பல் ஒன்று பெரு வெளிச்சத்தை அருளின் முகத்தில் பாய்ச்சி உறுதிப்படுத்தியது. பின், எதையோ சிங்களத்தில் பேசி, அவளை இழுத்து சென்றார்கள். முன்பே வீங்கிப்போயிருந்த அவள் கன்னத்தில் தாறுமாறாய் அறைந்து விட்டு ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள்.

எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்தாள் அவள். இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டாள். அந்த வாகனத்தின் ஓட்டுனர் தன்னை சிஐடி என்று சொல்லிக்கொண்டான். 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு கொண்டு செல்கிறோம் என்றான். அருளிற்கு எதுவும் விளங்கவில்லை. சிங்கத்தின் வாயில் பிடிபட்ட புள்ளிமானிற்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கப் போகிறது…. எதுவும் கேட்கும் அளவிற்கு நிலைமை புரியவில்லை. என்னை விசாரிக்க என்ன உள்ளது என கேட்க மனம் பதைபதைத்தது. ஆனாலும் கன்னத்தில் அறைந்த முரட்டுக் கரங்கள் தந்த வலி இன்னும் காதில் விண் கூவியதால் மௌனமானாள்,.

அந்த எண்ண நிசப்தத்தை அறுத்துப் போட்டது அந்த ஆண் குரல். இது வரை சிங்களத்தில் கத்திய அந்தக் குரல் “என்னைத் தெரிகிறதா?” என்றது. சரளமாக தமிழில் பேசியது பேரதிர்ச்சி தந்தது. காதைப்பிய்த்தன அந்த வார்த்தைகள். ஆனாலும் மௌனம் கலையாது இருந்தாள் அருள்.

வாகனம் ஆமை வேகத்தில் குண்டும் குழியுமான பாதையால் சென்றது.
எந்த இடம் என தெரியவில்லை. அருளின் நினைவில்… எதுவாக இருந்தாலும் என்ன? விலங்கிடப்பட்ட கைகளுடன் தப்பிவிடவா முடியும்? நடப்பதைக் கண்டு கொள்வோம்… என எண்ணி முடிக்க வாகனம் ஓர் குளக்கரையில் சிறிது நேரம் நின்றது.

தன்னை சிஐடி எனக் கூறிக் கொண்டவன் பின்னால் விலங்கிடப்பட்ட கையை கழட்டி விட்டு, ஓர் முழுச் சட்டையைக் கொடுத்தான். போடுமாறு சொன்னான். அப்போதும் அருள் நினைத்தாள்… தன்னை சுட்டு இந்த குளத்தில் போடப்போறான்… ஆனாலும் கொஞ்சம் நல்லவன் தான் போல… அம்மணமாக இல்லாமல் உடுப்பு தந்துள்ளான்.

சிறிது வினாடியில் வாகனம் மீண்டும் புறப்பட்டது. அப்போது அருளின் குழந்தைகளின் பெயர் சொல்லி விசாரித்தான் அவன். அவளது கணவரையும் கேட்கவே…. தயக்கமாகவும் உறுதியாகவும் தெரியாது என்றவளின் மனம் தடுமாறத் தொடங்கியது.

யார் இவன் என்று புரியவில்லை. ஆனாலும் பிள்ளைகள் பெயர் சொல்லுமளவிற்கு நெருக்கமானவனா? என்ற எண்ணங்கள் பல்குழலாய் வெடித்துச் சிதறியது.
“இன்னும் தெரியவில்லையா?”
“இல்லை!” என்ற ஒற்றை சொல்லில் முடித்தாள்.

ஒரு பங்குனி வெயில் கொழுத்திக் கொண்டிருந்த நாளொன்றில் (2005 ஆம் ஆண்டு) தெரிந்த ஒருவரின் வாகனத்தில் கிளிநொச்சியில் இருந்த அருளின் வீட்டிற்கு விருந்தாளியாக அன்றி நோயாளியாக வந்தான் ஒருவன். சின்னம்மை (chicken pox) நோயுடன் உடல் முழுவதும் தொப்பளங்கள். நோயின் வலியால் துடித்துக் கொண்டிருந்தவனைக் காட்டி, இவனை பாதுகாப்பாக வீட்டில் வைத்து பராமரித்து மாறியவுடன் தகவல் தருமாறு சொல்லிச் சென்றார் அவர்.

அவனின் உடல் நிலை மோசமாக மாறியது. அருள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவள் என்பதால் நுணுக்கமாகவும், ஒரு தாயைப்போலும் பதிணனந்து நாட்களாக வீட்டில் வைத்து பராமரித்து, நன்கு தேற்றி, புதுத் தெம்புடன் அனுப்பி வைத்த அவன் தான் இவன் என்ற உண்மை தெரிந்தபோது மனம் எரிமலையாய்க் குமுறியது.

இப்போது அவன் கம்மிய குரலில் சொன்னான்,
“நான் உங்களை பல நூறு பெண்புலிகளைக் கைது செய்திருக்கும் இடத்தில் விடப்போகிறேன். அங்கு தான் உங்களிற்கு இப்போ பாதுகாப்பு. நீங்கள் எனக்கு செய்த அளவிற்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை. மன்னித்து விடுங்கள். புதிதாகப் போகுமிடத்தில், இங்கிருந்து வந்த தகவல் எதையும் சொல்லிவிடாதீர்கள்!” எனச் சொல்லிச் சென்றான்.

அருள் பம்பைமடு பெண்கள் முகாமில் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டாள். ஆனாலும், இன்று…. உயிரிருந்தும் உறக்கமற்றவளாக வாழ்கின்றாள்.
எண்ணற்ற விடைதெரியா கேள்விகள் அவள் மனதில்….
யார் இவன்?
இன்றும் அவனது முகம் சரியாக நினைவில்லை, பெயர் சரியாகத் தெரியாது.
அவன் நல்லவனா?
நல்லவனாக இருந்தால் என்னை மட்டும் ஏன் காப்பாற்ற நினைத்தான்? அத்தனை அலறல் குரல்களும் இவன் இதயத்தை உருக்கவில்லையா?
அல்லது அவனின் கையறு நிலையா?
எனக்கு மட்டும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தானா?

உறவுகளிற்கு என்ன ஆனது? இன்னும் எப்படி எல்லாம் வதைத்தார்கள்? உயிருடன் திரும்பினார்களா? அல்லது வேறு ஏதாவதா? கொன்று புதைத்தார்களா? காணாமல் ஆக்கப்பட்டார்களா?

யாரிடமும் பகிர்ந்து விட முடியாத வலிகள்… இவை, வேதனையை விட வேறெதையும் தந்து விடப்படவில்லை என்று தெரிந்தும் சேமித்து வைத்துக் கொள்கிறாள்… ஏனெனில், இந்த உண்மைகளை நாம் கூறினால் அன்றி எப்படி வெளியுலகத்திற்குத் தெரியவரும்?

  -மிதயா கானவி 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )