
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்க ஆயுதம் கடத்தல்: கிம்புலாஎல குணா – பூக்குட்டிகண்ணா உட்பட 9 பேர் இந்தியாவில் கைது
தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து விடுதலைப் புலிகளை மீள உயிர்ப்பிப்பதற்காக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி ஒன்பது இலங்கையர்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் (NIA) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் டுபாய், பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அடிக்கடி பயணம் செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஹாஜி சலீமுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்துள்ளதாக அந்த முகவரகம் தெரிவித்துள்ளது.
இவர்களும் சலீமும் இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகளை புத்துயிர் பெறச் செய்ததாக தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சி. குணசேகரன் எனப்படும் கிம்புலாஎல குணா, பூக்குட்டிகண்ணா என்ற புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சியா, ஸ்டான்லி கெனடி (பும்மா), லடியா சந்திரசேன, தனுக்க ரொஷான், வெல்லே சுரங்க மற்றும் திலீபன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக முகவரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குணசேகரன் மற்றும் புஷ்பராஜா ஆகியோரால் கட்டுப்படுத்தப்படும் இலங்கை போதைப்பொருள் மாபியாவின் நடவடிக்கைகள், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகஸ்தர் ஹாஜி சலீமுடன் இணைந்து, இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுவதாக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் கருதுகிறது.
முன்னதாக இவர்கள் மீது கடந்த ஜூலை 8 ஆம் திகதியன்று, தேசிய புலனாய்வு முகவரம் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

