
தமிழ் வேட்பாளர் குறித்து ராஜதந்திரிகளுடன் பேச்சு
புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிறது. இந்த நிலையில் ரணிலுக்கா? சஜித்துக்கா? அனுரவுக்கா ஆதரவளிப்பது என பலரும் பேசுகின்றனர். ஈழத் தமிழருக்கு இவர்கள் தரப்போவது என்ன? வெனக்கேள்வி எழுப்பிய இலங்கை தமிழரசுக் கட்சி எஸ்.சிறிதரன் தமிழ் வேட்பாளர் தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பேச ஆரம்பித்துள்ளனர் எனவும் கூறினார்
கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
எமது கட்சியின் பொறுப்பான செயற்பாடு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அதனால் இன்று புரட்சிகர அரசியலாக அடையாளப்படுத்தி பயணிக்க உள்ளேன்.
சுயநல அரசியல் மற்றும் சூட்சுமமான அரசியலால் பல துன்பகரமான நிலை ஏற்பட்டது. காலத்துக்கு காலம் புதிய தலைவர்கள், புதிய மனிதர்களை கட்சி உருவாக்கும்.
கட்சி தலைமைக்காக 4 தடவை திருகோணமலை நீதிமன்றம் சென்றுள்ளேன். அத்துடன் சமாதான பேச்சுக்களுக்கும் சென்றுள்ளேன். ஆனால் அங்கு பேசுவதொன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் உள்ளது.சந்தர்ப்பம் சூழ்நிலை உருவாகும் போது நடந்த அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு புரட்சிகர அரசியலை மேற்கொள்ள உள்ளமையை தெரிவிக்கிறேன். நேரிய, கௌரவ அரசியல் பயணத்தை விட்டுக்கொடுப்புடன் முன்னெடுக்க வுள்ளேன் என்பதனை இன்றைய புரட்சிகர நாளில் தெரிவிக்கிறேன்.
பொது வேட்பாளர் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது.2005ஆம் ஆண்டு ஜனதிபதி தேர்தலை பகிஸ்கரித்தோம். தேசியத் தலைவ ர் மீது இருந்த நம்பிக்கையில் நாம் பகிஸ்கரித்தோம்.
2009 எங்களை தாக்கியவரையே ஆதரித்து எமது கட்சி செயற்பட்டது. ஆனாலும் அவர் தோல்வியடைந்தார்.பின்னர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஜனாதிபதியாக்க மக்கள் வாக்களித்தனர். பின்னர் அவர் ராஜபக்சவை ஆதரித்து அழகு பார்த்தார்.
கடந்த தேர்தவில் நிலை மாற்றமடைந்தது. ஜனாதிபதியாவதற்கு பாராளுமன்றில் டலசுக்கு ஆதரவளித்தோம். எனினும் அவர் தோற்றார்.
இந்த நிலையில் புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிறது. இந்த நிலையில் ரணிலுக்கா? சஜித்துக்கா? அனுரவுக்கா ஆதரவளிப்பது என பலரும் பேசுகின்றனர். ஈழத் தமிழருக்கு இவர்கள் தரப்போவது என்ன?
தமிழ் வேட்பாளர் தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பேச ஆரம்பித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் எம்மிடம் கேட்கின்றனர்.
நான் யாழ்ப்பாணத்தில் எரிக்சொல்ஹெய்மை சந்தித்தேன். தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியவில்ல என்ற குற்ற உணர்வு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாட தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேச வேண்டும் எனவும் அவர் கூறினார். 23 வருடத்துக்கு பின்னர் நேரில் பேசியிருந்தேன். இதன் போது பொது வேட்பாளர் தொடர்பிலும் பேசினார்.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா வரை கருத்து சொல்வதற்கான சுதந்திரம் கட்சியில் உள்ள அனைவருக்கும் உண்டு என கூறிவருகின்றனர். அது கட்சி சிதைவுக்கு வழியமைக்கக் கூடாது என்பார்கள்.
என்னைப் பொறுத்த வரையில் இதுவரை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த அனைவரும் ஏமாற்றி உள்ளனர்.ரணில் கருணாவை பிரித்தது முதல் பல்வேறு துரோகத்தன செயற்பாடுகளை செய்தவர். சஜித் ஆளுமையற்றவர்.
அனுரகுமார தலைமையிலான கட்சி வடக்கு கிழக்கை பிரித்து. இளைஞர்களை திரட்டி இராணுவத்தில் இணைத்து போராட்டத்தை அழித்ததுடன், யுத்த வெற்றியை கொண்டாடினார்கள்.இவர்களுக்கு ஆதரவளிப்பதன் வெகுமானம் என்ன?
இலங்கையில் சிங்கள பெளத்தனே ஜாதிபதியாகலாம் என்பது தெரியும். தெரிந்தும் பொது வாக்கெடுப்புக்கு ஏற்ப இந்த தமிழ் பொது வேட்பாளர் பொருத்தமாகும்.இதன் மூலம் சமஸ்டி கேட்கவும்,நிலம், பெளத்தமயமாக்கல் மட்டும் இராணுவமயமாக்கலுக்கான எதிர்ப்பை காட்டும் சந்தர்ப்பமாகவும் அமையும். இதுவே எனது கருத்து என்றார்.