பௌத்த மரபுரிமைகளை அழித்தால் வட,கிழக்கில் மோசமான  நிலைமை ஏற்படும்

பௌத்த மரபுரிமைகளை அழித்தால் வட,கிழக்கில் மோசமான நிலைமை ஏற்படும்

வடக்கு,கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை நிறுத்த வேண்டும்.சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனம் அல்ல. அவ்வாறு கருதினால் அதனை விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,

வெடுக்குநாறி மலை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தெற்கில் உள்ள மத சுதந்திரம் வடக்குக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

வடக்கில் மத சுதந்திரம் உள்ளதா? என்பதை முதலில் ஆராய வேண்டும்.வெடுக்குநாறி மலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன.வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? ஆகவே தெரியாத விடயங்களை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பேசி பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்கள். பின்னர் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாத்தில் ஈடுபடுகிறார்கள்.மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்கிறார்கள்.இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

பௌத்த தொல்பொருள் மரபுரிகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் .சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம்.அவ்வாறு கருதினால் அதனை விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )