
தற்கொலை மனநிலையில் இருந்த சந்தேக நபர்; கனடா கொலைச் சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள்
கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த இளைஞன் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றின் இளம் தாய் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளும் குடும்பத்துடன் வசித்து வந்த மற்றுமொருவருமே உயிரிழந்துள்ளனர்.
கொலையை செய்த 19 வயதுடைய பேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞனும் இவர்களுடன் சில காலம் வாழ்ந்து வந்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தாரின் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் உயிரை மாய்க்கும் எண்ணத்தில் இருந்ததாக தாக்குதலுக்கு இலக்காகி உயிர் பிழைத்த குடும்பத்தின் தந்தை பிரதேச பௌத்த விகாரையின் தலைவர் மற்றும் அவரது மற்றுமொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
இதேவேளை சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை கொலையுண்ட குடும்பத்தினர் அண்மையில் கொண்டாடியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளைஞர் விரும்பிய அனைத்தையும் இந்த குடும்பத்தினர் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விஹாரையின் பௌத்த பிக்கு இந்த குடும்பம் பற்றிய பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த குடும்பம் மிகவும் கருணையானவர்கள் எனவும், மத வழிபாடுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் எனவும் இந்தக் குடும்பம் கொலையுண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பந்தே சுனேத தேரர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக பெர்பியன் டி சொய்சாவின் 19ஆம் பிறந்த நாளை இந்த குடும்பத்தினர் கூடி கொண்டாடி மகிழ்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தந்தையான தனுஷ்க விக்ரமரட்னவின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும், முகத்திலும் முதுகிலும், நெஞ்சுப் பகுதியிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பல்வேறு கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த குடும்பத்தினர் கனடாவிற்கு வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவிட் தொற்றின் பின்னர் சர்வதேச மாணவர்கள் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கி வரும் உளவியல் அழுத்தங்கள் குறித்து கவனம் செலுத்தி தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் சுனேத தேரர் தெரிவித்துள்ளார்.