
சாந்தனின் உயிரிழப்புக்கு காரணமான திருச்சி கொடுஞ் சிறையை நேரில் வந்து பாருங்கள்; தமிழ் எம்.பி.களிடம் வேண்டிய சட்டத்தரணி புகழேந்தி
உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூன்று பேரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என தமிழ்நாட்டை சேர்ந்த சட்டதரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நண்பகல் உடுப்பிட்டி இலக்கணாவத்தை தேவன்குறிச்சி, அறிவகம் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற சாந்தனின் அஞ்சலி நிகழ்வின் போது தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாந்தனை எப்படியாவது காப்பாற்றி தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிருந்தோம். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் மோசமாகி நினைவிழந்த நிலைக்குச் சென்றார். அந்த நிலையில் கூட எயார் அம்புலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இருந்தும் அனைத்து போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார்.
ஈழத்தில் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு உடனடியாக வரவேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாக பாருங்கள். தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட்டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுங்கள். அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும்.
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டிற்கு சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதகான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளேன் என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை சட்டத்தரணி புகழேந்தி, 2005 ஆம் ஆண்டு முதல் எவ்வித கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.