
சூழ்ச்சிகளை முறியடிக்கவும்; சிறிதரனுக்கு சம்பந்தன் அறிவுறுத்து
உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் இருவரும் நேற்று முன் தினம், கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் அவரரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சிறிதரனுக்கு சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிருவாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச்சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அத்தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடாத்தி அன்றையதினமே மாநாட்டையும் நடாத்துமாறும் சம்பந்தன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.