
தமிழரசுக் கட்சியின் தலைமை சிறிதரனுக்கு யோகேஸ்வரன் ஆதரவு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு ஆதரவு கோரும் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் உட்பட கட்சி உறுப்பினாகள் கலந்துகொண்டனர்.
இதன்போது நீண்டநேரம் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
இந்தக் கூட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைமைப் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான சி.சிறிதரனே அதற்கு பொருத்தமானவர் எனவும் அவருக்கு உறுப்பினர்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்ததுடன் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

