
20 – 30 ரூபா வரை தேநீர், சிற்றுண்டி விலை அதிகரிப்பு
தேநீர், சிற்றுண்டி உள்ளிட்ட உணவு வகைகளின் விலையை அதிகரிக்கப்போவதாக உணவகங்களின் சங்கங்கள் அறிவித்துள்ள போதிலும், இதுவரையில் விலையை அதிகரிக்க வில்லை என உணவக உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரித்தாலும் வாடிக்கையாளர்களை நினைத்து பழைய விலைக்கே உணவுகளை விற்பனை செய்வதாகவும் இன்னும் 2 வாரங்களுக்கு பழைய விலைக்கே உணவுகளை விற்பனை செய்து அதன் பிறகு முடிவு எடுப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பின் காரணமாகவும் எரிபொருள், நீர் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் முதல் சில உணவகங்களில் உணவு விலைகள் அதிகரித்துள்ளன.
தேநீர், பால் தேநீர் மற்றும் அனைத்து வகையான உணவு வகைகளின் விலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், முறையான முறைமையின் கீழ் மூலப்பொருட்களை மானிய விலையில் வழங்கினால் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எனினும் பெரும்பாலான உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் தேநீர், சிற்றுண்டி, சோற்றுப் பொதி உள்ளிட்ட உணவு வகைகளின் விலையை 20 – 30 ரூபா வரையில் அதிகரித்துள்ளன.

