
சிங்கள மக்களிடமிருந்து வட, கிழக்கை பறிக்கச் சதி; பௌத்த சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்
நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதி நடப்பதாகவும் இந்நிலைமையை எதிர்கொள்ள சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.
அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் இருபத்தைந்தாயிரம் சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தாலும் அந்த மாகாணங்களில் தற்போது ஒரு சிங்கள குடும்பமும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களில் 52 வீதமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்றனர். மகத்தான சிங்கள தேசமாக இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் தமது உரிமைகளை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாகாணங்களில் மூன்று மாவட்டங்களில் சிங்களப் பாடசாலைகள் இல்லை எனவும், இது ஒரு துரதிஷ்டமான நிலை எனவும் இந்த நிலைமையை எதிர்கொள்ள சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

