
வீடே இனி சிறை!
சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசல் நிலமைகளால் சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசல் நீண்டகால பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைக்குத் தீர்வாக தடுப்பு காவலில் வைப்பதற்கு அல்லது சிறைச்சாலையில் வைப்பதற்கு மாற்றுத் தீர்வாக உரிய வழக்கு நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பொருத்தமான சட்டங்களை அறிமுகம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

