
ரணில் விரும்பும் தேர்தல் எது?
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தாம் ஜனாதிபதியாக நீடிப்பதில் நெருக்கடி ஏற்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருதுவதால் முதலில் பொதுத் தேர்தல் நடாத்தப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் இம்முறை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதுடன் அப்படி பொதுத் தேர்தல்நடந்தால், யார் ஆட்சி அமைத்தாலும், ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் நீடிக்க அனுமதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது புத்திசாலித்தனமான நடவடிக்கையல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருதுவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்த போதிலும், அவ்வாறு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித திட்டமும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அதன் மூலம் இரண்டு பெரிய அரசியல் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால், தமது அரசியல் வாழ்க்கை உடனடியாக முடிவுக்கு வருமெனவும் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறவில்லையென்றால் இந்தக் குழு அரசியல் அனாதைகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமென கருதுவதால் இவ்வாறு அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

